தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் முன¢னாள் முதல்வரும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஜெயலலிதாமீது தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் முதன்முறையாக பெங்களூரு நீதிமன்றத்தில் இரு நாட்கள் அவர் ஆஜரானதுதான் கடந்த வாரம் முழுக்க தலைப்புச் செய்தி. அதே நேரம் 2 ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் உள்ள மகள் கனிமொழியை காண்பதற்காக டெல்லிக்கும் சென்னைக்குமாக பறந்துகொண்டிருக் கிறார் திமுக தலைவர் கருணாநிதி. கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லிக்குச் சென்ற அவர், மகளின் ஜாமீன்மனு மீதான விசாரணை நடந்த திங்கள் வரை காத்திருந்தார். இந்த இரண்டு அரசியல் எதிரிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சிக்கலில் உள்ளார்கள். கருணாநிதியின் மகள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். ஜெயலலிதா தன்மீதான வழக்கில் நீதிமன்றப் படி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். வழக்கு தொடரப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கடந்தும் ஒருமுறைகூட ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பாதுகாப்பு, உடல்நலம் என பல காரணங்களுக்காக நேரில் செல்வதைத் தவிர்த்துவந்தார். இதுவரையில் அவர் 110 முறை வாய்தா வாங்கியிருப்பதாக தெரியவருகிறது. ஒருகட்டத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, அக்டோபர் 20 ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆ-ஜராக வேண்டும் என்று உத்தர விட்டது. அதன்படி இரு நாட்கள் பரப்பன அக்ரஹார பகுதியில் அவருக் காக அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனையா முன் ஆஜராகி 567 கேள்விகளுக்குப் பதிலளித்துத் திரும்பியுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப் பட்டவர்களிடம் 1,384 கேள்விகள் கேட்கப்பட இருந்தன. அதாவது 92 சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட்டது. முதல் நாளன்று 379 கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெயலலிதா, அடுத்த நாள் மேலும் 188 கேள்விகளுக்குப் பதிலளித்தார். மீதியுள்ள கேள்விகளுக்கு நவம்பர் 8 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
‘‘அடுத்து ஜெயலலிதா தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படவேண்டும். பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதம் இருக்கிறது. ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். முன்பு சில நாட்கள் பொறுப்பு முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்ததைப்போல வேறொருவர் முதல்வராகக்கூடும். ஆனால் அம்மாதிரி நிலை மீண்டும் ஏற்படுமா என்று இப்போதே உறுதியாகக் கூற இயலாது’’ என்கிறார் பெயர்சொல்ல விரும்பாத வழக்கறிஞர் ஒருவர். 2 ஜி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் ஆ.ராசா உடனே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டால் ஆறு ஆண்டுகளுக்கு ஒருவர் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்ட நடைமுறை இருக்கிறது. தார்மீகரீதியாக பதவிவிலகவேண்டும்.
மார்க்சிஸ்ட் எம்பியான டி.கே.ரெங்கராஜன், முதல்வர் ஜெயலலிதா நீதித்துறையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறார். மேலும் பேசிய அவர், “ஒரு வழக்கை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகளை நீதித்துறையே வழங்குகிறது. பல வழக்குகள் முப்பது நாற்பது ஆண்டுகள் நடந்துகொண்டி ருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் எந்த வழக்கையும் முடிப்பதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா பல கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார். ஆனால் என்னவித தீர்ப்பு கிடைக்கும் என்று நீதிபதியைப் போல என¢னால் தீர்ப்பு சொல்லமுடியவில்லை” என்கிறார்.
திமுகவின் சட்டத்துறைச் செயலர் ஆர். எஸ். பாரதி, ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தின்மீது எந்த மரியாதையும் இல்லை என்கிறார்: “பதினான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒருமுறைகூட நீதிமன்ற வாசலில் போய் நிற்கவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தையே மதிக்காமல் நடக்கிறாரே என்று மற்ற மாநிலங்களில் கேலியாகப் பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா சர்வசாதாரணமாக நீதிமன்றம் போய் வருகிறார். நீதிமன்றத்தின் நடவடிக்கை களை மதித்து நடக்கிறார்’’என்கிறார்.
திமுக தலைவர் சந்திக்கும் நெருக்கடி வேறுவகையானது. கடந்த மூன்று மாதங்களாக திகார் சிறையில் இருக் கும் கனிமொழியை மூன்றாவது முறையாக பார்த்துவந்துள்ளார். அந¢தச் சிறையில் ஒரு பூ இருந்தால்கூட வாடிவிடும் என்று மகளைப் பற்றி கவலைப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல், பொதுக்கூட்டம், அறிக்கை என்று சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் அவரது மனம் கனிமொழியின்மீது கவலை கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. முதல்முறை மகளைச் சந்தித்தபோது கலங்கிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. இந்த முறை ஐமுகூ தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் டெல்லி சென¢ற அன்றுதான் கனிமொழி உள்ளிட்ட 17 பேர்மீது சிபிஐ நீதிமன்றத்தில் நம்பிக்கை மோசடி. ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆயுள் தண்டனை வரை இதில் கிடைக்க இடம் இருக்கிறது.
மிகுந்த சாதுரியமாக மீடியாவை எதிர்கொள்ளும் திமுக தலைவரிடம் தற்போது ஒரு பாசமுள்ள தந்தையின் பரிதவிப்பைத்தான் அதிகம் பார்க்கமுடிகிறது. ஆக, ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு தவிப்பு.